வள்ளியூர்,
வள்ளியூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.19¾ லட்சம் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிளை மேலாளர்
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர், கருவளையான் மகன் மணிகண்டன் (வயது 26). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் வள்ளியூர் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் கொடுத்து அந்த பணத்தை வசூலித்து வந்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுவினர் பணம் செலுத்தி வந்த நிலையில், பணம் செலுத்தியதற்கு அத்தாட்சியாக நெல்லையில் உள்ள ஒரு வங்கியின் ரசீது போன்று போலியான ரசீதை கொடுத்துள்ளார். கடன் தொகையை மணிகண்டன் தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கும் செலுத்தவில்லை.
ரூ.19¾ லட்சம் மோசடி
இந்தநிலையில் அந்த நிறுவனத்தில் திடீர் ஆய்வு செய்த போது, மகளிர் சுயஉதவிக்குழுவினர் கடன் தொகையை செலுத்தாமல் இருந்ததும், பின்னர் நடத்திய விசாரணையில், மகளிர் சுயஉதவிக்குழுவினர் சீராக பணம் செலுத்தி இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக கிளை மேலாளர் மணிகண்டன் ரூ.19 லட்சத்து 70 ஆயிரத்து 676–ஐ மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணிகண்டன் தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து திசையன்விளை நிறுவன மேலாளர் முத்தழகன் (27), வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகிறார்.
நன்றி : தினத்தந்தி