நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாக அவரது பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். இவரது மகள் மாலினி தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கெனவே 3 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்துக்காக திசையன்விளை அரசு மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 3-ம் தேதி காலையில் சிசேரியன் மூலமாக குழந்தைப் பிறந்துள்ளது.
பின்னர் மாலையில் அவரையும் குழந்தையையும் பொது வார்டுக்கு மாற்றி இருக்கிறார்கள். வலியைக் குறைப்பதற்காக ஊசி போடப்பட்ட பின்னர், அவரைக் கவனிக்க மருத்துவர்கள் யாரும் வரவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அதனைத் தொடர்ந்து அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால் ரத்தம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது,. அதன் பின்னரும் மருத்துவர்கள் யாரும் வராமல் செவிலியர்களே சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், திசையன்விளை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்காத நிலையில், அவரை வெளியில் சிகிச்சைக்கு கொண்டு செல்லவும் அனுமதிக்காமல், நெல்லையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர். அதனால் 2 மணிநேர தாமதத்துக்குப் பின்னர், நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாலினியை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் வழியிலேயே அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. ஆம்புலன்ஸிலும் ஆக்சிஜன் இல்லாததால் சிகிச்சை அளிக்க இயலாததால் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த மாலினியின் தந்தை முருகன், சகோதரர் ராஜேஷ் மற்றும் உறவினர்கள் இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மாலினி உயிரிழந்தார். அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
நன்றி:விகடன்