புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சுமார் 4,600க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்கு வங்க கடலில், இலங்கையின் தெற்கு பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதால்,
தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இந்நிலையில் நேற்றும் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான பகுதிகளில் நாட்டுபடகுகள், கட்டுமரங்கள், வல்லங்கள் என 3,500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. வேம்பார், புன்னக்காயல், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிளிலும் விசைப்படகுகள் 100க்கும் மேற்பட்டவை மீன்பிடிக்க செல்லவில்லை. மணப்பாடு கிராமத்தில் விசைபடகுகள், பைபர் படகுகள் என சுமார் 300க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
ஏற்கனவே கடந்த 10ம்தேதி முதலே மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்லவில்லை. மீன்பிடி தொழிலையே நம்பி வாழும் மீனவ குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் சின்னம் எதிரொலியாக தூத்துக்குடி, முத்தையாபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணியளவில் பலத்த மழை பெய்தது. திசையன்விளை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளான உவரி, கூடுதாழை, பெரியதாழை ஜார்சியா நகர், கூட்டப்பனை, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி, தோமையார்புரம், பெருமணல் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நன்றி: தினச்சுவடு
