தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு காந்திநகரை சேர்ந்தவர் தாமஸ் கனிஸ்யூதாஸ் (வயது 62). இவர் திசையன்விளையில் டூ வீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி ஜெயமேரி.
நேற்று காலை கணவன்–மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு உவரி அந்தோணியார் கோவிலுக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த 2பேரும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க செயின்கள், மோதிரம், வெள்ளி கொலுசு, வெள்ளி கொடி உள்பட 38 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.15ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.8லட்சம் இருக்கும்.
இது குறித்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
சாத்தான்குளம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். எனவே கொள்ளையர்களை பிடிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: மாலைமலர்
