திசையன்விளையில் நடந்த தேசிய அளவிலான மின்னொளி கபடி போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை அணிக்கு கோப்பை பரிசு வழங்கப்பட்டது.
மின்னொளி கபடி போட்டி
முதல்–அமைச்சர் ஜெயலலிதா 68–வது பிறந்த நாளையொட்டி, நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி.எஸ்.ஆர். விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான ஆண், பெண்கள் மின்னொளி கபடி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 18 அணிகளும் கலந்து கொண்டு விளையாடின.
இறுதி போட்டியில் சென்னை ஹைடெக் அணியும், சென்னை சிப்காட் அணியும் மோதின. இதில் சென்னை ஹைடெக் அணி 27–16 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. 3–வது இடத்தை தெலுங்கானா அணியும், 4–வது இடத்தை செல்லூர் அணியும் பிடித்தன. பெண்கள் பிரிவில் மும்பை அணி முதலிடமும், அரியானா அணி 2–வது இடமும் பிடித்தன.
சென்னை அணிக்கு கோப்பை
போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை ஹைடெக் அணிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 68 மற்றும் சுழற்கோப்பையை ராதாபுரம் யூனியன் தலைவரும், நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வழங்கினார்.
பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மும்பை அணிக்கு ரூ.1 லட்சத்து 68, சுழற்கோப்பையை அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ் வழங்கினார். ஆண்கள் பிரிவில் 2–வது இடம் பிடித்த சென்னை சிப்காட் அணிக்கு ரூ.1 லட்சத்து 68–ஐ சவுந்தரபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் பால ரிச்சர்டு வழங்கினார்.
விழாவில், மாவட்ட இளைஞரணி இளை செயலாளர் அருண் புனிதன், அப்புவிளை செயலாளர் மகேசுவரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் நாராயணன், திசையன்விளை நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ஆர்.சுபாஷ், சாந்தகுமார், மாவட்ட மாணவரணி பொருளாளர் வடலி செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்து இருந்தார்.
