ஜூலை 22, 2015
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர், பூச்சிக்காடு பகுதியில் நான்கு பேரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 10 ஆண்டு ஜெயில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கூடுதல் செசன்சு கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் அரசூர், பூச்சிக்காடு பகுதியில் 2013 ல் கோயில் திருவிழா நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் சாமிரெட்டிகண்டிகை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கேசவன் மகன் ராகவன், 15, கோயில் திருவிழாவிற்காக பூச்சிக்காடு வருகை தந்திருந்தார். 29.5.13 ல் ராகவன், தனது சித்தப்பா ஜெயபாலுடன் கருப்பசாமி கோயிலுக்கு சென்றிருந்தார். ஜெயபால் சாமியாடியை பார்த்து,”” நான் ஆண்டு தோறும் கோயிலுக்கு வருகிறேன். இருந்தும் கஷ்டப்பட்டு வருகிறேன்,” என்றார். சாமியாடியவர் பதில் தெரிவிக்கவில்லை. “”நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் பதில் சொல்லாமல் சென்றால், எப்படி நீ குறி சொல்வது சரியில்லை. நீ சாமியாடக்கூடாது,” என ஜெயபால் தெரிவித்துள்ளார். இதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின் மாலை 4.30 மணிக்கு ராகவன், அவரது உறவினர் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுரேஷ்,30,பூச்சிக்காடு பகுதியை சேர்ந்த தயாநிதி,32, ஸ்ரீதர்,28, ஆகியோர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பூச்சிக்காட்டை சேர்ந்த சாமிவேல்,50, இவரது மகன் சுந்தர்,25, மனைவி நட்சத்திரம்,43, கனகராஜ்,39, இவரது மனைவி கலா,36, ஆகியோர், நான்கு பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தட்டார்மடம் போலீசில் ராகவன் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி ஆர்.ரவீந்திரன், கொலை முயற்சி வழக்கில் சாமிவேலுக்கு, இரு பிரிவுகளின் கீழ் தலா 10 ஆண்டு ஜெயில், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம், சுந்தருக்கு, காயம் ஏற்படுத்துதல் பிரிவில் 5 ஆண்டு ஜெயில், 5 ஆயிரம் ரூபாய் அபராதம், கனகராஜ்க்கு, சிறுகாயம் ஏற்படுத்துதல் பிரிவில் 3 ஆண்டு ஜெயில், 3 ஆயிரம் ரூபாய் அபாராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். நட்சத்திரம், கலா ஆகியோர் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நன்றி: தினமலர்
