திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா வருகிற 23–ந் தேதி தொடங்குகிறது.
சுடலை ஆண்டவர் கோவில்
தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுடலை ஆண்டவர் கோவில்களில் ஒன்றாக திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் விளங்கி வருகிறது. அந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான கொடை விழா வருகிற 23–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு, சுவாமிக்கு பூஜை, மாணவ–மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. மாலையில் கோலப்போட்டி, இரவில் சமய சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சிறப்பு நிகழ்ச்சிகள்
24–ந் தேதி சுமங்கலி பூஜை, 25–ந் தேதி காலையில் மாணவ–மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் போட்டி, மாலையில் 1,008 திருவிளக்கு பூஜை, 26–ந் தேதி காலையில் சீவலப்பேரியில் இருந்து புனித நீர் எடுத்து வருதல், கும்பாபிஷேகம், இரவில் சுவாமிக்கு மாகாப்பு அலங்கார பூஜை.
27–ந் தேதி காலையில் மாணவ–மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, சமையல் போட்டி, பால்குடம் ஊர்வலம் நடக்கிறது.
மஞ்சள் பெட்டி ஊர்வலம்
28–ந் தேதி (வெள்ளிக்கிழமை) விழாவின் முக்கிய நாள் ஆகும். அன்று சுவாமிக்கு அன்னபூஜை, சிறப்பு அன்னதானம், மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடுதல், உச்சிகால பூஜை, மகுட ஆட்டம், வில்லிசை மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இரவில் விடிய, விடிய பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். நள்ளிரவில் சுவாமி முட்டை விளையாடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி குங்குமம் பாஸ்கர் மற்றும் ஆனந்த விநாயகர், மன்னர்ராஜா கோவில், சுடலை ஆண்டவர் கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
நன்றி: தினத்தந்தி
