ஜூலை 13, 2015
திசையன்விளை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே இட்டமொழி மெயின் பஜாரில் டாட்டா இண்டிகேஷ் ஏடிஎம் மையம் உள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள விஜய அச்சம்பாடு, பண்டாரபுரம், பெரும்பனை, அழகப்பபுரம், சங்கரன்குடியிருப்பு, புதூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று காலை இந்த ஏடிஎம் மையம் அருகில் செல்போன் கடை வைத்திருக்கும் அதே ஊரை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஆயிரம் ரூபாய் எடுத்தார். இதில் 100 ரூபாயாக வந்த 10 தாள்களும் கள்ளநோட்டுகளாக வெளிவந்தது. தொடர்ந்து ஜெயமுருகன் என்பவர் எடுத்த 4 ஆயிரம் ரூபாய் அனைத்தும் 100 ரூபாய் கள்ளநோட்டுகளாக 40 தாள்கள் வந்தது. இதனை கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் காட்டுத்தீயாக அப்பகுதியில் பரவியது. இதனை தொடர்ந்து நேற்று பணம் எடுத்த அனைவரும் தாங்கள் எடுத்த பணத்தை ஆய்வு செய்தனர். இதில் அதே ஊரைச் சேர்ந்த எட்வின் எடுத்த ரூ.10 ஆயிரத்தில் 14 நூறு ரூபாய் கள்ளநோட்டுகள் வந்துள்ளதும், மேல பண்டாரபுரம் கந்தசாமி மகன் சரவணன் எடுத்த ஐந்து 100 ரூபாயும் கள்ளநோட்டுகளாக வெளிவந்ததும் தெரியவந்தது.
இதனையறிந்த அப்பகுதி வியாபாரிகள் ஏடிஎம் மையத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த வள்ளியூர் டி.எஸ்.பி. பாலாஜி, திசையன்விளை இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், உவரி இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். இது குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்த போலீசார் விசாரணைக்காக ஏடிஎம் மையத்தை பூட்டி சாவியை எடுத்து சென்றனர்.
நன்றி: தினகரன்
மேலும்: ஒன் இந்தியா
