ஜூலை 16, 2015
மெஞ்ஞானபுரம் அருகே தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் 15 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர் திருட்டுகள்
திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், நாசரேத், தட்டார்மடம் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் மேற்பார்வையில், மெஞ்ஞானபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராபின்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மெஞ்ஞானபுரம் அருகே உள்ள காட்டு பகுதியில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மானாட்டைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் பூச்சி என்ற பார்வதி முத்து (வயது 20), முருகையா பாண்டியன் மகன் மணிகண்டன் என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் பல்வேறு வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
எனவே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 15 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி: தினத்தந்தி
