சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையார்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49). இவர் தூத்துக்குடி மாவட்ட பாஜ துணைத் தலைவராக உள்ளார். இவர் தன் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி தட்டார்மடம், சாத்தான்குளம் பகுதியில் சுவரொட்டி ஒட்டினார். மேலும் அவரை கண்டித்து பாஜ சார்பில் போராட்டம் நடத்த போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ராபிசனுக்கும், செல்வராஜிக்கும் பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏப்ரல் 4ம் தேதி செல்வராஜ் அவரது கட்சி பணிக்காக கொம்மடிக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஓடை அருகில் வரும்போது அங்கு காரில் வந்த இன்ஸ்பெக்டர் ராபின்சன் காரை கொண்டு அவரை வழி மறித்து சட்டையை பிடித்து இழுத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டாராம். இதுகுறித்து செல்வராஜ், சாத்தான்குளம் டிஎஸ்பி, மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் புகார் செய்தார். ஆனால் இன்ஸ்பெக்டர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் செல்வராஜ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ், அவரது புகார் குறித்து 4 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் மீது வழக்குபதிவு செய்து உண்மை நிலையை தாக்கல் செய்ய வேண்டும் என சாத்தான்குளம் டிஎஸ்பி மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நன்றி: தமிழ்முரசு
