திசையன்விளையில் பழைய கார் விற்பனையாளரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொல்ல முயற்சித்தது. 17 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இச்சம்பவம் திசையன்விளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
அரிவாள் வெட்டு
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தேரிவிளையை சேர்ந்தவர் சேர்மத்துரை. இவர் திசையன்விளையில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். கோடீசுவரரான இவர் நேற்று மாலை தனது கார் நிறுவனத்தில் இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் நிறுவனத்துக்குள் புகுந்தது. அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைத்து இருந்த 17 கார்களை அடித்து நொறுக்கியது. இதை சற்றும் எதிர்பாராத சேர்மத்துரை அங்கு இருந்து ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த அந்த கும்பல் உடனடியாக அவரை ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க முயன்ற அவரது கடை ஊழியர் முத்து செல்வன் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பரபரப்பு
இச்சம்பவத்துக்கு காரணம் முன்விரோதம் என கூறப்படுகிறது. இதுபற்றி திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகிறார். இந்த சம்பவம் திசையன்விளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நன்றி: தினத்தந்தி
