நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தேரிவிளையை சேர்ந்தவர் சேர்மத்துரை, இவர் திசையன்விளையில் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை அவர் நிறுவனத்தில் இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் திடீரென அங்கு நின்ற 17 கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும் சேர்மத்துரையை அரிவாளால் வெட்ட முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் சேர்மத்துரையை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க முயன்ற அவரது நிறுவன ஊழியர் முத்துச்செல்வனையும் அரிவாளால் வெட்டினர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.
கும்பல் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக சேர்மத்துரையை மர்மக்கும்பல் வெட்டியது தெரியவந்தது.
தற்போது சேர்மத்துரை நடத்தி வரும் கார் விற்பனை நிறுவன இடம் தூத்துக்குடி மாவட்டம் தட்டார் மடத்தைச் சேர்ந்த த.மா.கா. பிரமுகர் ஜேசுராஜன் என்பவருக்கு சொந்தமானதாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேசுராஜன் சேர்மத்துரையிடம் தனக்குரிய இடத்தை காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் சேர்மத்துரை காலி செய்ய மறுத்துவிட்டார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சேர்மத்துரை ஜேசுராஜனை தாக்கியுள்ளார். இப்பிரச்சினை தொடர்பாக சேர்மத்துரை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக சேர்மத்துரைக்கும் ஜேசுராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக ஜேசுராஜன் கூலிப்படையினரை ஏவி சேர்மத்துரையை கொலை செய்ய முயற்சித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே போலீசார் ஜேசுராஜனிடம் விசாரணை நடத்துவதற்காக தட்டார் மடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவரது வீடு பூட்டி கிடந்தது. தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
நன்றி: மாலைமலர் & தமிழன் தொலைக்காட்சி

