கருமேனியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மணிநகர் தரைப்பாலத்தை முழ்கடித்துச் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சுமார் இருபது கிராம மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அண்மையில் பெய்த மழையால் உடன்குடி அருகேயுள்ள சடையநேரி குளம், தாங்கை குளம் ஆகிய குளங்கள் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. தாங்கைகுளத்தின் உபரிநீர் கருமேனியாற்றில் கலந்து மணிநகர் தரைப்பாலம் வழியாக மணப்பாடு கடலில் கலக்கிறது.
இந்நிலையில், கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தண்ணீர் தடைபட்டு தேங்கும்நிலை ஏற்பட்டுள்ளதால், மணிநகர் பகுதியிலுள்ள தரைப்பாலம் முழுவதுமாக வெள்ளத்தில் முழ்கியுள்ளது.
இதில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் செல்வதால், கடந்த 10 நாள்களாக பாலத்தின் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பிறைகுடியிருப்பு, களியன்விளை, வெங்கட்ராமானுஜபுரம், மெய்யூர், தா.கைலாசபுரம், தா.ராமச்சந்திரபுரம், தா.பண்டாரபுரம், செம்புலிங்கபுரம், பள்ளக்குறிச்சி, மணிநகர், வட மற்றும் தென் உடைபிறப்பு, புதூர், அன்பின்நகரம், அடைக்கலாபுரம் உள்ளிட்ட சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பணி மற்றும் கல்வி நிமித்தமாக உடன்குடி,திசையன்விளை, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
தற்போது, தரைப்பாலம் மூழ்கி முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியூர்களுக்கு சென்று வர முடியாமல் தவிக்கின்றனர்.
மேம்பாலம் தேவை: இதுகுறித்து உடன்குடி ஒன்றிய பாஜக துணைத் தலைவர் உதயகுமார் கூறியதாவது: கருமேனியாற்றில் பெருவெள்ளம் செல்வதால் உடன்குடி- திசையன்விளை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டினால்தான் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். அதிகாரிகள் இதற்கான ஆய்வை மேற்கொண்டு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
நன்றி: தினமணி