திசையன்விளை
திசையன்விளையில் லாரிகளில் இருந்து விழும் கற்களினால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தூண்டில் வளைவு அமைக்கும் பணி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி கடல் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ராட்சத கற்கள் லாரியில் ஏற்றப்பட்டு திசையன்விளை பஜார் வழியாக உவரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு செல்லும் லாரிகள் அதிகமான உயரத்தில் கற்களை ஏற்றி செல்கிறது. இதனால் பஜார் பகுதியில் உள்ள வேகத்தடைகளை கடந்து செல்லும் போது ராட்சத கற்கள் அடிக்கடி சாலையில் தவறி விழுந்து விடுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
விபத்து ஏற்படும் அபாயம்
நேற்று காலையில் திசையன்விளை–இடையன்குடி சாலையில் உள்ள வேகத்தடையை கற்களை ஏற்றி வந்த லாரி ஒன்று கடந்து சென்றது. அப்போது, லாரியில் இருந்த ராட்சத கல் தவறி சாலையில் விழுந்தது. காலை நேரம் என்பதாலும், அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பெரும் விபத்து ஏற்படும் முன்பு அதிகபாரம் ஏற்றி வரும் லாரிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நன்றி: தினத்தந்தி
