ஜூலை 10, 2015
போலீசாரிடம் இருந்து இருமுறை தப்பி சென்ற மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர், திருச்செந்துார் போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.திருச்செந்துார் கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்த இளைஞர் ஒருவரை விசாரித்தனர்.
விசாரணையில் தெரியவந்ததாவது:
மதுரை நாமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் மகன் சத்தியகுமார் என்ற சிவா,23, என தெரியவந்தது. திருச்செந்துார் கோயில் பகுதியில் கடை வைத்துள்ள கணேசன் என்பவரது அலைபேசியை திருடியது தெரியவந்தது. மேலும் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பெண்ணை கடத்திய வழக்கில் சிவா கைது செய்யப்பட்டு திண்டுக்கல் கோர்ட்டுக்கு கொண்டு வரும் வழியில் போலீசாரிடம் இருந்து தப்பி வந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் ஒரு வீட்டில் நகை பணம் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிவாவை மதுரை ஜெயிலில் அடைத்தனர். மதுரை ஜெயிலில் இருந்து 15.5.2015ல் திருவாடனை கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் அழைத்து சென்ற போது காளையார்கோவில் பஸ் ஸ்டாண்டில் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறி போலீசாரிடம் இருந்து இரண்டாவது முறையாக தப்பியுள்ளார், என்பது தெரியவந்தது. திருச்செந்துார் போலீசார் சிவாவை சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர் செய்து, ஜெயிலில் அடைத்தனர்.
நன்றி: தினமலர்
